சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார்? – சிங்கள ஊடகம் சூசக தகவல்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று சூசகமான தகவலை வெளியிட்டுள்ளது.
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக மிக முக்கிய பிரமுகர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் என்று ‘ஜனயுகய’ என்ற சிங்கள இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் அவர் யார் என்று அந்தச் செய்தியில் கூறப்படவில்லை.
வசீம் தாஜூதீன் கொலையுடன் சிரந்தி ராஜபக்ச தொடர்புபட்டுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
தாஜூதீன் காலை நடந்த அன்றிரவு அலரி மாளிகையில் இருந்து 41 தொலைபேசி அழைப்புகள் சந்தேகத்துக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தொலைபேசி இலக்கம் சிராந்தி ராஜபக்சவின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கானது என்று தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே, கைது செய்யப்படவுள்ள முக்கிய பிரமுகர் சிராந்தி ராஜபக்சவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, மருத்துவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்படவுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.