நாமல் மீதான தாக்குதல் – இரு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர்
ஊடகவியலாளர் நாமல் பெரேராவைத் தாக்கிய இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அடையாள அணிவகுப்பின் போது, அடையாளம் காணப்பட்டனர்.
2008 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள், சிறிலங்கா பத்திரிகை நிறுவகத்தின் பயிற்சி நெறி இணைப்பாளராக பணியாற்றி நாமல் பெரேராவும், பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய அவரது நண்பரான மகேந்திர ரணவீரவும் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.
நாரஹேன்பிட்டிக்கும், கிருலப்பனைக்கும் இடைப்பட்ட மிகவும் பரபரப்பான வீதியில்- முக்கிய இராணுவ நிலை ஒன்று, அரச தகவல் திணைக்களம், நாரஹேன்பிட்டி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றுக்கு அருகில், வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றது.
தாக்குதலாளிகள், நாமல் பெரேராவைக் கடத்த முயன்றனர். ஆனால் அவர் எதிர்த்துப் போராடியதால், அவரும் அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற மூன்றாவது நாள் நாமல் பெரேரா நாட்டை விட்டுத்தப்பிச் சென்றார். அவர் தற்போது அவுஸ்ரேலியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் ஆய்வு மற்றும் அரசியல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.
ஊடகவியலாளர் கீத் நொயாரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் இந்த அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.