வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு
புத்தளத்தில் இருந்து மன்னார் – சிலாவத்துறை நோக்கி வாக்காளர்களை ஏற்றி வந்த இரண்டு அரச பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் சிலாவத்துறையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக, புத்தளத்தில் உள்ள வாக்காளர்களை ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு அரச பேருந்துகள் மீது இன்று காலை தந்திரிமலை பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அதேவேளை, மற்றொரு பேருந்து மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இதில், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் பேருந்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.