அமெரிக்காவுடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்திடம் இருந்து, 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்கான உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தக் கொடையின் மூலம், கொழும்பு நகர போக்குவரத்து முகாமைத்துவம், நாடு முழுவதும் வீதிகள் கட்டுமானம், மற்றும் காணி முகாமைத்துவத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
அமெரிக்காவின் எம்சிசி நிறுவனத்துடன், சிறிலங்கா நிதி அமைச்சு கூடிய விரைவில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடும். இந்த திட்டம், 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கப்படும்.
எம்சிசி கொடையை பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அனுமதி கோரும், அமைச்சரவைப் பத்தி்ரம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பல முறை நிராகரிக்கப்பட்டு, இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
இறுதியில், புதிய அரசாங்கம் இது குறித்து முடிவெடுக்கட்டும் என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
எனினும், திடீரென இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.