காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கிறது இந்திய நிறுவனம்
சிறிலங்காவில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (Marine Rescue Coordination Centre (MRCC) அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது.
பாரத் இலத்திரனியல் நிறுவனம் என்ற இந்திய நிறுவனமே, இந்த கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்கு அமைச்சரவை கொள்வனவு குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
ஆறு மில்லியன் டொலர் செலவில் இந்த அமையம் அமைக்கப்படவுள்ளது.
கடலில் ஆபத்தை எதிர்கொள்ளும் மீனவர்கள் மற்றும் கடல் பணியாளர்களை மீட்தற்காக இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த மையத்தை காலியில் அமைப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.
சிறிலங்கா விமானப்படை, சிறிலங்கா கடலோரக் காவல்படை, மற்றும் வணிக கப்பல் செயலகம் என்பன இந்த மையத்தின் இணைப் பங்காளர்களாக இருக்கும்.