மேலும்

ஜூன் 9 ஆம் நாள் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 9ஆம் நாள்,சிறிலங்காவுக்கு குறுகிய  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இதனை உறுதிப்படுத்தினார்.

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியப் பிரதமர் மோடி, மாலைதீவுக்கும் சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

“மாலைதீவுக்கான பயணத்தின் ஒரு கட்டமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கும் வரவுள்ளார். அவர் ஜூன் 9ஆம் நாள் சிறிலங்கா வருவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று புதுடெல்லியில் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னைய செய்தி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளக் கூடும் என்று புதுடெல்லி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது தடவையாக நேற்று இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர், நரேந்திர மோடி ஜூன் முதல் வாரத்தில் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

வரும் ஜூன் 7 – 8ஆம் நாள்களில் அவர்  மாலைதீவுப் பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் இந்தப் பயணத் திட்டத்தை உறுதிப்படுத்தவில்லை. எனினும், ஜூன் முதல் வாரத்தில் இந்தியப் பிரதமர் மாலே வரவுள்ளார் என்று மாலைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைதீவுக்கான இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் மோடி சிறிலங்காவுக்கும் செல்வார் என்று விடயமறிந்த விட்டாரங்கள் கூறியுள்ளன.

மாலைதீவு செல்லும் வழியிலோ அல்லது அங்கிருந்து திரும்பும் வழியிலோ, இந்தியப் பிரதமர் கொழும்புக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுடன் இணைந்திருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமரின் இந்த குறுகிய நேரப் பயணம் இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *