இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது – ரணில்
13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு அதிகபட்ச தன்னாட்சி உரிமை மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு ஆகிய இரண்டு விடயங்களை முக்கியத்துவப்படுத்தியதாக, 1987ஆம் ஆண்டு இந்திய சிறிலங்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இதற்காக 13 ஆவது திருத்தச்சட்டம் இந்தியாவின் ஆதரவும் சிறிலங்காவில் கொண்டு வரப்பட்டது. னால் தமிழர்கள் இந்த விடயத்தில் சிறிய முன்னேற்றங்களே ஏற்பட்டதாக கூறுகின்றனர். சிங்களவர்கள் பெரும்பாலானோர் இதனை எதிர்க்கின்றனர்.
இந்த நிலையில், 30 ஆண்டுகால 13ஆவது திருத்தச்சட்டம் காலாவதியாகி விட்டதா அதில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர்-
“உண்மையில்லை. நாங்கள் புதிய அரசியலமைப்பை வரைவதற்காக அரசியலமைப்பு சபை ஒன்றை கொண்டிருக்கிறோம். அதற்காக வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அதிகாரப் பகிர்வு பற்றி கலந்துரையாடுகிறோம். ஆனால் ஒவ்வொரு மாகாணசபையும் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கும் மாகாணசபைகளுக்கும் இடையில் பிரிவுகள் காணப்படுகின்றன.
இது தமிழ்- சிங்கள விவகாரம் அல்ல. இது மத்திய- மாகாண விவகாரம். எதனை நாம் வழங்க முடியும் என்பது குறித்து கலந்துரையாடி வருகிறோம். இது ஒரு ஜனநாயக நாடு.“ என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஆனால் புதுடெல்லி 13 ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் நெகிழ்வுப் போக்குடன் இருக்கிறதா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர், ஆம், எப்போதும் நெகிழ்வுடன் தான் இருக்கிறது. அதனை நாம் வரவேற்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.