பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் உக்ரேன் காட்டுப் பகுதியில் காலமானார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு நாடொன்றில் அடைக்கலம் தேடிச் செல்லும் வழியில், உக்ரேன் காட்டுப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சை அளிக்க வசதியில்லாத நிலையில் மரணத்தை தழுவியுள்ளார்.
மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்வின் சுதர்சன், சுடர் ஒளி மற்றும் வீரகேசரி நாளிதழ்களில் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். பின்னர், யாழ். தினக்குரல் நாளிதழில் இணைந்து கொண்ட அவர், கேலிச்சித்திரங்களை வரைந்து பிரபலமானார்.
யாழ். தினக்குரலில் கணினியின் துணையுடன் நவீன உத்திகளைக் கையாண்டு அவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
மறைந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வினின் மறைவுக்கு புதினப்பலகை குழுமம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.