சிறிலங்காவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக திணைக்கள மூத்த ஆய்வு ஆலோசகர் கலாநிதி சாய் ஷாங்ஜின் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.
இந்தக் குழுவில், மூலோபாய ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி வாங் லியொங், மத்திய குழுவின் அனைத்துலக திணைக்கள உதவிச் செயலர்களான யூ காய்ஷி, மற்றும் பூ சுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தெற்காசியாவின் தற்போதைய நிலைமைகள், சீன அதிபரால் முன்னெடுக்கப்படும் ஒரு பாதை ஒரு அணைத் திட்டம், மற்றும் அதில் பங்கேற்கும் நாடுகளில் பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய சாதகமான தாக்கங்கள், பிரதான கடல்சார் பயனாளர்களின் தலையீடு, இந்தியப் பெருங்கடலை அமைதிக்காகப் பயன்படுத்தல், ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பு, உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இவர்கள் சிறிலங்காவின் அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி பேனாட் குணதிலக தலைமையிலான பாத் பைன்டர் அமைப்புடனும் இந்தக் குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், கூட்டுக் கற்கைகள் மற்றும் வளவாளர்களை பரிமாற்றம் செய்து கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.