மோடியுடன் மைத்திரி தொலைபேசியில் பேச்சு – ஊரி தாக்குதலுக்கு கண்டனம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர், நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.
இதன்போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊரி என்ற இடத்தில் கடந்த 18ஆம் நாள் அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு இந்தியப் பிரதமரிடம் சிறிலங்கா அதிபர் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எல்லை தாண்டிய இந்த தீவிரவாதச் செயலையும் சிறிலங்கா அதிபர் கண்டித்துள்ளார்.