பிரகீத் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளை மேல் நீதிமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட விசாரணையை அடுத்தே இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
6ஆம், 7ஆம், 8ஆம், மற்றும் 9ஆம் சந்தேக நபர்களான- இரண்டு லெப்டினன்ட்கள், ஒரு கோப்ரல், ஒரு சார்ஜ்ட் தர அதிகாரிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
5 இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், 3 மில்லியன் ரூபாவுக்கான இருவரின் பிணை உறுதியின் அடிப்படையிலும் இவர்களை விடுவித்த நீதிமன்றம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.