யாழ்ப்பாணத்தில் ஐ.நா பொதுச்செயலர் – கூட்டமைப்பையும் சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இன்று மதியம் யாழ். பொதுநூலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஐ.நா பொதுச்செயலருடனான சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், யோகேஸ்வரன், சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் வட மாகாணசபையின் அமைச்சர்கள் நால்வரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புகள் இடம்பெற்ற போது, யாழ்.பொது நூலகத்துக்கு வெளியே, காணாமற்போனவர்களின் உறவினர்கள் மற்றும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அவர்களைச் சந்திக்காமலேயே ஐ.நா பொதுச்செயலர் அங்கிருந்து வெளியேறினார்.
வடக்கு மாகாண ஆளுனரையும், அவரது செயலகத்தில் ஐ.நா பொதுச்செயலர் இன்று சந்தித்துப் பேசியிருந்தார்.