நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்க ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவை இணைத்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை அமைத்து யானைச் சின்னத்தில் ஐதேக போட்டியிடவுள்ளது.
இதற்கான அங்கீகாரத்தை, கொழும்பு கம்பல் பங்காவில் இன்று நடந்த ஐதேகவின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தக் கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதிகாரத்துக்கு வந்த பின்னர், ஊழலைக் குறைத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதேதமது நோக்கம் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும் 48 பொருளாதார வலயங்களை அமைக்கப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பன ஐதேகவில் இணைந்து போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
எம்.கே.டி.எஸ்குணவர்த்தன, அர்ஜுன ரணதுங்க, கலாநிதி சரத் அமுனுகம, ஹிருணிகா பிரேமச்சந்திர, அதுரலியே ரத்தன தேர்ர் உள்ளிட்டோர் ஐதேகவின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கையெழுத்திடவுள்ளனர்.
அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.