ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வேட்புமனுவில் கையெழுத்திட்டார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்காக இன்றுகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த தகவலை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நேற்றைய தினமே மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டு விட்டதாக பசில் ராஜபக்சவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தன.
பிரசன்ன ரணதுங்க விவகாரத்தினால், வேட்பு மனுவில் கையெழுத்திடுவது இழுபறியில் இருந்தது.
இன்று காலை பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டதையடுத்து, மகிநத ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பல ஆகியோரும் வேட்புமனுவில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
மகாவலி நிலையத்தில் வைத்து வேட்புமனுவில் கையெழுத்திடும் பணி இடம்பெற்று வருகிறது,
அதேவேளை, குற்றவியல் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா, மேர்வின் சில்வா, சரண குணவர்த்தன ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பதில்லை என்று இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன