மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – இன்றைய கூட்டத்தில் மைத்திரி அறிவிப்பு
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய தனித்தனியான சந்திப்புகளிலேயே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளினதும் தலைவர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட இடமளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கத் தயார் என்றும், ஆனால் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இதற்கு சந்திரிகா உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அறிவித்துள்ளார்.
இதையடுத்து. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபட்டு, அதன் ஒரு பகுதியினர் மகிந்த ராஜபக்ச தலைமையில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.