மாணவி வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் முற்றாக முடங்கியது குடாநாடு
புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உச்சத் தண்டனையை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியும், நடத்தப்படும் பொதுமக்களின் போராட்டங்களினால் யாழ். குடாநாடே இன்று செயலிழந்து போயுள்ளது.
இன்று காலை தொடக்கம் வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
யாழ்.நகரப்பகுதிகளில் கண்டனப் பேரணிகள், எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை மாணவர்கள், தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.போதனா மருத்துவமனைப் பணியாளர்கள், சுகாதாரத் திணைக்களப் பணியாளர்களும் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
யாழ்.செயலகம் முன்பாக ஆசிரியர் சமூகம் உள்ளிட்டோர் பங்கேற்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகமும், நாவாந்துறைப்பகுதியில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தப் போராட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை, அரச செயலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, யாழ்ப்பாணத்தில் முயல்பு நிலை முற்றாக முடங்கியுள்ளது.
இதற்கிடையே, யாழ்.நகரில் வீதிகளில் ரயர்கள் போடப்பட்டு எரிக்கப்படுவதால் எங்கும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
ரயில் எரிப்பில் ஈடுபட்ட ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.