தேசிய வறுமைக்கோட்டு எல்லைக்குள் யாழ், முல்லை, அம்பாறை மாவட்டங்கள்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்கள் வறுமைக்கோட்டு எல்லைக்குட்பட்ட சராசரி தலா வருமானத்தைக் கொண்டுள்ளதாக, ஆகப் பிந்திய புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, சிறிலங்காவில் சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2005 ஏப்ரல் மாத நிலவரப்படி, 3823 ரூபாவுக்குள் வருமானம் பெறுவோர் தேசிய வறுமைக்கோட்டு எல்லைக்குள் இருப்பவர்களாக கணிக்கப்பட்டுள்ளனர்.
மாதம் ஒன்றுக்கு தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆகக்குறைந்த சராசரி தலா வருமானமாக, ஏப்ரல் மாதம், 3823 ரூபா தேவைப்பட்டிருப்பதாக, கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கண்டி, புத்தளம், அம்பாறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, பொலன்னறுவ, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் சராசரி, வறுமைக்கோட்டு எல்லைக்குட்பட்ட தலா வருமானத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.
யாழ்.மாவட்டத்தின் சாராசரி தலா வருமானம், 3769 ரூபா என்றும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சராசரி தலா வருமானம், 3789 ரூபா என்றும், அம்பாறை மாவட்டத்தின் சராசரி தலா வருமானம் 3794 என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், வறுமைக்கோட்டை எல்லைக்கு மேல் வருமானம் பெறும் மாவட்டங்களின் பட்டியலில், மன்னார்( 3,949 ரூபா), வவுனியா (3,907ரூபா), கிளிநொச்சி (3,877 ரூபா), மட்டக்களப்பு (3,871ரூபா), திருகோணமலை(3,824ரூபா) உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.