கோத்தாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை – என்கிறது பொது பலசேனா
தாம் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், இணைந்து கொள்ளுமாறு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பொது பலசேனா அமைப்புத் தெரிவித்துள்ளது.
சிங்கள கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, தாம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், சிங்கள பௌத்தர்களுக்குத் தலைமை தாங்கும், தேசியத் தலைவர் ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அறிவித்திருந்தது.
இதையடுத்து, கோத்தாபய ராஜபக்சவை புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பொது பலசேனா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனை நிராகரித்துள்ள, பொது பல சேனாவின் நிறைவேற்று அதிகாரி, டிலந்த விதானகே, ஊடகங்களில் வெளியானது போன்று, எமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு, கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இது தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவும் எம்முடன் பேச்சு நடத்தவில்லை.
ஊடகங்களில் வெளியான இந்த பொய்யான தகவல்கள், கோத்தாபய ராஜபக்சவினதும், எமது அரசியல் அமைப்பினதும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான சூழ்ச்சியாகும்.
இதுபற்றிய பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இந்தச் செய்திகளால் எமது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும். நாம் இதனை நிராகரிக்கிறோம். இது அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி.
இதுபோன்ற செய்திகள் சங்க, பௌத்தர், சிங்களவர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடும்” என்றும் தெரிவித்துள்ளார்.