சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்த கொடிகள், சிறிலங்காவின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மையினங்களைக் குறிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட- தனியே சிங்கள இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இது ஒரு தீவிரமான விவகாரம். இரண்டு பகுதிகள் நீக்கப்பட்ட கொடிகளைப் பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்புக் கோருவதுடன் கவலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்தக் கொடி எவருக்கேனும், அல்லது குழுவினருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகிறோம்” என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, நீதிமன்றத் தடையை மீறி நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக, வரும் மே 8ம் நாள் நீதிமன்றில் முன்னிலையாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப் பெரும, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே, ஜயந்த கேத்தாகொட, சரத் வீரசேகர, மற்றும் உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் ஏனைய 26 பேருக்குமே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.