கொழும்பில் கூட்டமைப்புடனும் முக்கிய பேச்சு நடத்துவார் ஜோன் கெரி
அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா அரசாங்கத்துடன் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றம் எதிர்க்கட்சிகளுடனும் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பயண நாள் தொடர்பாக இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் தெரிவித்துள்ளன.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயண நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாவிடினும், அவர் தனது சிறிலங்கா பயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்கத்துடன் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுடனும் முக்கிய பேச்சுக்களை நடத்துவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோன் கெரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும், அமெரிக்க உயர் அதிகாரியாக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.