லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும், சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்பு இருந்தது.
இதுதொடர்பாக கோத்தாபய ராஜபக்ச மீது மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாடு உண்மையானது.
ஆனால், அந்தக் கொலையுடன் மேர்வின் சில்வாவும் தொடர்புபட்டிருந்தார்.
புதிய அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்கும்.
அதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஆகியோரின் கொலைகள் குறித்தும் மீள்விசாரணை நடத்தப்படும்.
ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை.
எம்மிடம் எல்லா தகவல்களும் உள்ளன. இவை எவ்வாறு இடம்பெற்றன, யார் இவற்றைச் செய்தது என்று அஎமக்குத் தெரியும்.
அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.