திறைசேரி செயலரும் தப்பிச் சென்றார்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில், சர்ச்சைக்குரிய பங்கு வகித்து வந்த திறைசேரியின் செயலர் பி.பி.ஜெயசுந்தர, தேர்தலுக்கு முதல் நாளே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள், மற்றும், கடன்கள் உள்ளிட்ட விவகாரங்களில் ராஜபக்ச அரசின் மோசடிகளுக்கும் முடிவுகளுக்கும் மூலகாரணமாக இருந்தவர் பி.பி.ஜெயசுந்தர.
நாட்டைச் சீரழிப்பவர் என்று முன்னர் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பி.பி.ஜெயசுந்தர, கடந்த புதன்கிழமையே சிறிலங்காவை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அவருக்கு, சீனாவுடன் நெருக்கமான தொடர்புடைய – புதிதாக தொடங்கப்படவுள்ள அனைத்துலக வங்கி ஒன்றில் முக்கிய பதவி அளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், சிறிலங்கா நிதியமைச்சு அதனை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையே சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதும், மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மகிந்தவின் ஆட்சி வீழ்ச்சியுற்றதும், அவரது அரசாங்கத்தில் அரச ஊடகங்களில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் பலரும், நாட்டை விட்ட வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய திறைசேரி செயலராக அர்ஜுன மகேந்திரன்
இதற்கிடையே, புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளதையடுத்து, சிறிலங்காவின் திறைசேரி செயலராக பொருளாதார மற்றும் முதலீட்டு நிபுணர் அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தின் காலத்தில், முதலீட்டுச் சபையின் தலைவராகப் பதவி வகித்திருந்தார்.
அத்துடன், முன்னதாக இவர் எச்எஸ்பிசி வங்கியின் முகாமைப் பணிப்பாளராக 2013ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
அதையடுத்து, எமிரேட்ஸ் என்டிபி வங்கியி்ன் தலைமை முதலீட்டு அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார்.