தன்னைப் பிசாசு என்று யாழ்ப்பாணத்தில் ஒப்புக்கொண்டார் மகிந்த
தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான தனக்கு ஆதரவளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள்.
இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன்.
மைத்திரிபால சிறிசேன இலவசக் கல்வியை இல்லாமல் செய்ய பார்க்கிறார். இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியில் கை வைக்க ஒரு போதும் நாம் அனுமதிக்கமாட்டோம்.
வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் சொல்பவர்கள் நாங்கள் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தும், அதற்கு வராவிட்டால் நாம் என்ன செய்வது?
நாம் ஐனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என தெரிந்தும் வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்த ஏற்பாடு செய்தேன்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண மக்களுக்கு என்ன செய்தார்கள்?
இரணைமடு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கு தடைவிதித்தார்கள். ஆனால் உங்களுக்காக அந்த நீரை கட்டாயம் பெற்றுத் தருவேன்.
நான் சிறுவயதிலிருந்தே பல தடவைகள் வடக்குக்கு வந்துள்ளேன். ஆனால் மைத்திரிபால எத்தனை தடவை வந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.
உங்களுக்கு மைத்திரிபாலவை தெரியுமோ எனத் தெரியவில்லை. ஆனால் என்னை நன்றாக உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் இப்போது எங்கு சென்றாலும் அபிவிருத்தி வேலைகள் தான் கண்ணுக்கு தெரியும். இனவாத அரசு எமக்கு தேவையில்லை. எமக்கு பாசம் தான் தேவை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள்” என தெரிவித்தார்.