சஜின் வாஸ் குணவர்த்தன கைது? – கோத்தாவிடம் இன்றைய விசாரணை முடிந்தது
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன இன்று கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அதிபர் செயலக வாகன மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் தற்போது சஜின் வாஸ் குணவர்த்தன விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
அவர் கைது செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் சிங்கள நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.
எனினும், அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சஜின் வாஸ் குணவர்த்தனவிடம் விசாரணை நடந்த வருவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வந்த கோத்தாபய ராஜபக்ச விசாரணை முடிந்து வெளியேறியுள்ளார்.
காலை 10 மணியளவில் அவரிடம் விசாரணை தொடங்கியிருந்தது. பிற்பகல் 1 மணியளவில், அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலகத்தில் இருந்து வெளியேறி, தனது வாகனத்தில் ஏறிச் சென்றார்.
அதேவேளை, தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.