ஞானசார தேரருக்கு வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது- உயர்நீதிமன்றம் உத்தரவு
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த, நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து கொண்ட விதம் காரணமாக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியதை அடுத்து, 2019ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள் ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த பொதுமன்னிப்பு தன்னிச்சையானது என்றும், சட்டரீதியாக செல்லுபடியற்றதென்றும், சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
