டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கைத்துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும் விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா நேற்றுமாலை கைது செய்யப்பட்டார்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் வசம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மதுஷ், டுபாயில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
