சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட, நொதேர்ன் பவர் நிறுவனத்தை, 20 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சுன்னாகத்தில் இயங்கிய நொதேர்ன் பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையத்தினால், நிலத்தில் கொட்டப்பட்ட எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டது.
இதனால் சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பல பகுதிகளிலும் குடிநீர் கிணறுகளில் எண்ணெய் கலப்பு ஏற்பட்டது.
இந்த மாசை ஏற்படுத்திய, நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையத்தின் தலைவர் கலாநிதி ரவீந்திர காரியவசம், அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டினால், நீர் மாசு ஏற்பட்டுள்ளது என்றும் இது குடிநீருக்காக கிணறுகளை நம்பியிருக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதியரசர்கள் பிரசன்ன ஜெயவர்த்தன, பிரியந்த ஜெயவர்த்தன, தெஹிதெனிய ஆகியோர், சுற்றாடல் மாசை ஏற்படுத்திய நொதேர்ன் பவர் நிறுவனம், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கும் தலா 40 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத வகையில்- 20 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளனர்.
ரவி குணவர்தன அல்ல ரவீந்திர காரியவசம் ( Ravindra Kariyawasam)
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.