14 துறைசார் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர்களாக நியமிக்கப்படுவதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்ட 14 துறைசார் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்த, மூத்த அதிகாரிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக, கே.டி.செனிவிரத்னவும், அமெரிக்காவுக்கான தூதுவராக றொட்னி பெரேராவும், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதமும், நெதர்லாந்துக்கான தூதுவராக நாகாலந்தவும், இந்தோனேசியாவுக்கான தூதுவராக,வை.கே.குணசேகரவும், தாய்லாந்துக்கான தூதுவராக ஜேஏஎஸ்கே ஜெயசூரியவும், பஹ்ரெயினுக்கான தூதுவராக பிரதீபா சாரமும், பிலிப்பைசுக்கான தூதுவராக சோபினி குணசேகரவும், ஒஸ்ரியாவுக்கான தூதுவராக சரோஜா சிறிசேனவும், ஓமானுக்கான தூதுவராக அமீரஜ்வாட்டும், ஐக்கிய அரபு குடியரசுக்கான தூதுவராக ஜேபி ஜெயசிங்கவும், இஸ்ரேலுக்கான தூதுவராக வருண வில்பத்தவும், சிங்கப்பூருக்கான தூதுவராக சசிகலா பிரேமவர்த்தனவும், துருக்கிக்கான தூதுவராக ரிஸ்வி ஹசனும் நியமிக்கப்படவுள்ளனர்.
வெளிநாடுகளில் சிறிலங்கா 52 தூதரகங்களை கொண்டிருக்கின்றது.
இந்த நியமனங்களின் மூலம், வெளிநாட்டு தூதரகங்களின் முதன்மை அதிகாரிப் பதவிகளில் தற்போது, 36.57 வீதமாக உள்ள துறை சார் இராஜதந்திரிகளின் பங்கு, 46 வீதமாக அதிகரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.