சிறிலங்கா துடுப்பாட்ட அணி வீரரின் தந்தை நேற்றிரவு சுட்டுக்கொலை
சிறிலங்காவின் தேசிய துடுப்பாட்ட அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், தெகிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரத்மலானை, கடற்கரை வீதியில், அவரது வீட்டுக்கு அருகே நேற்றிரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட, ரஞ்சன் டி சில்வா (62 வயது) மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினராவார்.
அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, தெகிவளை கல்கிசை மாநகர சபைக்குத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.