வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கியது சிறிலங்கா இராணுவம்
சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பில், பழைய டச்சு கட்டடத்தில் இந்த வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவினால், திறந்து வைக்கப்பட்டது.
அமைதி மாளிகை ‘Mansion of Peace’ என்ற பெயரில், இந்தப் பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக அமைதிகாப்பு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகளை இந்தப் பணியகம் மேற்கொள்ளவுள்ளது.
வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில், அமைதிகாப்பு படைக்கான படைப்பிரிவுகளை அனுப்புதல், அவர்களுக்கான பயிற்சிகள், செயற்பாடுகள் அனைத்தையும் இந்தப் பணியகமே கையாளவுள்ளது.
ஐ.நா அமைதிப்படைக்காக அனுப்பப்படும் சிறிலங்கா படையினர் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள நிலையிலேயே, சிறிலங்கா இராணுவம் இந்தப் புதிய பணியகத்தை ஆரம்பித்துள்ளது.