சிறிலங்கா இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, முகநூல், கீச்சகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர், தமது பதவி நிலை மற்றும் இராணுவ அடையாளங்களையோ, சீருடையுடனான படத்தையோ, இராணுவ கருவிகள், மற்றும் நிறுவனங்களின் படத்தையோ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, அரசியல், மதம், இன நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விடயங்களை பதிவேற்றுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், இன்னொருவருக்கு மாற்றிக் கொள்வதற்கும், கருத்து வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறும் சிறிலங்கா இராணுவத்தினரைக் கண்காணிப்பதற்காக, சமிக்ஞைப் படைப்பிரிவைச் சேர்ந்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் படையினர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.