ஆவா குழுவை அடக்குவதற்கு அனுமதி கோருகிறது சிறிலங்கா இராணுவம்
அரசாங்கம் தம்மிடம் பொறுப்பை ஒப்படைத்தால் வடக்கில் ஆவா குழுவை இலகுவாகக் கண்டறிந்து, பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்ய முடியும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன,
நாம் முகாம்களை விட்டு வெளியே வந்தால் அதற்கு எதிராக கூக்குரல் எழுப்புவார்கள். அதேவேளை, நாம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தால் தெற்கில் உள்ள சிலர் அதனை விமர்சிப்பார்கள்.
எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை, அரசியல் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
எமக்கு கட்டளையிடப்பட்டால், நாம் வெளியே வந்து பாதுகாப்பு அச்சுறுத்தலை அகற்றுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
ஆவா குழு என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் குழு எதுவும் இல்லை. இந்த பாதாள உலகக் குழுவை சில ஊடகங்கள் புகழ்கின்றன.
அவர்கள் அண்மைய துண்டுப் பிரசுரம் ஒன்றில் ஈழம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இது முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.
நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் அடங்கியிருந்த இந்தக் குழு, இரண்டு மாணவர்களின் கொலைக்குப் பின்னர் திடீரென வெளியே வந்திருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.