இந்திய அமைச்சரின் வருகைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இந்திய மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தராமனின் சிறிலங்கா பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புறக்கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்பாக, தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியா- சிறிலங்கா இடையில் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) செய்து கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
எட்கா உடன்பாட்டினால், சிறிலங்காவுக்கு இந்தியத் தொழிலாளர்கள் படையெடுக்கும் நிலை ஏற்படும் என்றும் இதனால் இலங்கையர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எட்கா உடன்பாடு குறித்து சிறிலங்கா அரசதரப்புடன், இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.