தப்பியோட முனைந்தவரை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற போது, தவறுதலாகச் சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1998ஆம் ஆண்டு, பருத்தித்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொபேர்ட் வெலிங்டன் என்ற விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர், கைவிலங்குடன் தப்பிச் செல்ல முயன்ற போது, இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சந்தேக நபரை தவறுதலாக சுட்டுக் கொன்றார் என்று சிறிலங்கா இராணுவ லெப்டினன்ட் தர அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தப்பிச் செல்ல முயன்ற விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபரை, முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்டினன்ட், தவறுதலாக தவறுதலாகச் சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சரோஜினி குசல விஜேவர்த்தன அறிவித்தார்.
இந்தக் குற்றத்துக்காக இராணுவ அதிகாரிக்கு, பத்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை விதிப்பதாகவும், 10 ஆயிரம் ரூபா அபராதமாகச் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் மரணமானவரின் நெருங்கிய உறவினர்களுக்கு இரண்டு மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் குற்றவாளியாக காணப்பட்ட இராணுவ அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.