மேலும்

சிறுபான்மையினருக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை கைது செய்ய வேண்டும் – அமெரிக்கா

eagle-flag-usaசிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், உயர்மட்ட அரசாங்கத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரிவினால், வெளியிடப்பட்டுள்ள, 2015ஆம் ஆண்டுக்கான அனைத்துலக மத சுதந்திர அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று இந்த அறிக்கை அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டது.

18ஆவது ஆண்டாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மத சுதந்திரம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால், மத ஒற்றுமையை முன்னேற்றவும், மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டுள்ளன.

எனினும், 2014ஆம் ஆண்டு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்ட கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மத சிறுபான்மையினருக்கு எதிரான மேலாதிக்கச் சிந்தனைகளை பொது பலசேனா அமைப்பு. பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *