பிரித்தானியாவின் புதிய தூதுவர் வடக்கில் மூன்று நாள் ஆய்வுப் பயணம்
சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற ஜேம்ஸ் டௌரிஸ், வடக்கு மாகாணத்தில் மூன்று நாள் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 27ம் நாள் தொடக்கம், 29ம் நாள் வரை அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தரப்புகளை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பிரித்தானிய தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அவர் வடக்கு மாகாண முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், யாழ். படைகளின் தளபதி, முல்லைத்தீவு கட்டளைத் தலைமையக பதில் தளபதி, யாழ். மாவட்ட அரச அதிபர், உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன், நல்லை ஆதீனம், மற்றும் யாழ். ஆயர் போன்ற மத தலைவர்களையும் பிரித்தானிய தூதுவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட வளலாய், பலாலி தெற்கு, மற்றும் கேப்பாபிலவு மீள்குடியமர்வு கிராமம் ஆகியவற்றுக்கும் பிரித்தானியத் தூதுவர் சென்று பார்வையிட்டார்.
இந்தப் பயணம் குறித்து, கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியத் தூதுவர், இந்தப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
வேறுபட்ட நிலையிலும், சூழ்நிலைகளிலும் உள்ள எல்லாத் தரப்பு மக்களினதும், நிலைமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.
வடக்கிலுள்ள மக்களின் நெருக்கடிகள், வாய்ப்புகள், நம்பிக்கைகள், கவலைகளைப் புரிந்து கொள்ள உதவியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.