யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு யாழ்.நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, யாழ்ப்பாணத்தில் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடத்தப்பட்டன.
இதன்போது, சில தீயசக்திகளால் திட்டமிட்டு யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதையடுத்து, 130 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் எந்தவொரு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியையும் நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.