தமிழ்மக்களின் கோரிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும் – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் கருத்து
சிறிலங்கா அதிபர் தனது முதல் 100 நாள் ஆட்சியையும் பூர்த்தியாக்கியுள்ளார். தனக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவை விட தனது நிர்வாகத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன 100 நாள் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
இதன்பின்னர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டமானது அதிபருக்கு உரித்தான பல்வேறு நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிக்கின்றது.
சிறிலங்காத் தீவானது புதியதொரு திசையில் பயணிப்பதற்கான குறிப்பாக சிறிசேனவின் தேர்தல் பரப்புரை வாக்குறுதி போன்று நாட்டை புதிய திசையில் கொண்டு செல்வதற்கான மிக முக்கிய நகர்வாக 19வது திருத்தச்சட்ட அமுலாக்கம் கருதப்படுகிறது.
ஆறு ஆண்டுகால அதிபர் பதவியை ஐந்து ஆண்டுகளாகக் குறைப்பதற்கு ஆதரவாக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாயன்று வாக்களித்திருந்தனர்.
ராஜபக்சவால் மூன்றாவது தடவையும் சிறிலங்காவின் நிறைவேற்று அதிபராகப் பதவி வகிப்பதற்காக வழங்கப்பட்ட அறிவித்தலை இல்லாதொழித்து இரண்டு தடவைகள் மட்டுமே அதிபர் பதவியில் அமரமுடியும் என்பதை 19வது திருத்தச் சட்டம் உரைக்கிறது.
குறைந்தது நான்கரை ஆண்டுகள் கடப்பதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபரால் கலைக்க முடியாது எனவும் ஒரு ஆண்டின் பின்னரே இதனை சிறிலங்கா அதிபர் முன்னெடுக்க முடியும் எனவும் 19வது திருத்தச் சட்டத்துடன் தொடர்புபட்ட சட்டம் விதந்துரைக்கிறது.
அரசியலமைப்புச் சபையின் இழப்பீடு மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமை, தேர்தலுக்கான சுயாதீன ஆணைக்குழுக்கள், காவற்துறை, அதிகாரத்துவம் மற்றும் நீதிச்சேவை போன்றன மீளவும் நிலைநாட்டப்பட்டுள்ளமை 19வது திருத்தச் சட்டத்தின் பிறிதொரு முக்கிய அம்சமாகும். இவை அனைத்தும் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளன.
சிறிசேன தற்போது தனது வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய தேவையில் உள்ளார். பிரதமரை அமைச்சரவையின் தலைவராக அங்கீகரிப்பதற்கு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற பல்வேறு பிரேரணைகளை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.
அமைச்சர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் சிறிலங்கா அதிபரின் தற்போதைய அதிகாரங்களில் எஞ்சியுள்ளது.
சிறிலங்காவின் சிறுபான்மையினர் குறிப்பாக தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவு செய்வதற்காக சிறிசேன தற்போது தனது 100 நாள் செயற்திட்டத்தில் மிகக்கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
கொழும்பு எவ்வாறு ஏனைய மாகாணங்களுடன் தொடர்புபட்டுள்ளதோ அதேபோன்று நாட்டின் சிங்களவரல்லாத குடிமக்களுக்கும் அதிகாரமளிப்பதற்கான சீர்திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும்.