19வது திருத்தத்தை எதிர்த்தவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துகிறது சுதந்திரக் கட்சி
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்காத தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.
19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிப்பதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்த தீர்மானத்துக்கு முரணாக, 19வது திருத்தச்சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அட்மிரல் சரத் வீரசேகர, அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், இவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை கடுமையான எச்சரிக்கையை விடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, 19வது திருத்தச்சட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக, வெளிநாடு சென்ற முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறித்தும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
முன்னாள் பிரதமர்கள் டி.எம்.ஜெயரட்ன, ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்டோரும், வாக்கெடுப்பு நாளன்று நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.