தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.
முள்ளிவாய்க்காலில், பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை, யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில், மற்றொரு நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழக பிரதான மண்டபத்துக்கு முன்பாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, கைலாசபதி கலையரங்கில், நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நினைவுச்சுடரை ஏற்றிவைக்க தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற பிரமுகர்களும் பொதுமக்களும், அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, அம்பாறை மாவட்ட பிரதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, கல்முனை முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கான ஆத்மசாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டதையடுத்து, ஆலய முன்றிலில் நினைவுத் தீபங்கள் ஏற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராஜா, எம்.இராஜேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, வவுனியாவில் இன்று பிற்பகல் 3 மணிக்கும், திருகோணமலை வெலிக்கடைத் தியாகிகள் மைதானத்தில் இன்று பிற்பகல் 5 மணிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.