ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற மக்ரோனிடம் உதவி கோரினார் அனுர
இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் சிறிலங்கா அதிபர் உதவி கோரியுள்ளார்.
புதுடெல்லியில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, இந்த வர்த்தக சலுகையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, உதவும்படி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
சிறிலங்கா அதிபரின் கோரிக்கையை அடுத்து, ஜிஎஸ்பி பிளஸ் வசதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு சிறிலங்காவுக்கு பிரான்ஸ் முழு ஆதரவை வழங்கும் என்று அதிபர் மக்ரோன் உறுதியளித்துள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிலங்காவுடனான பல்வேறு வர்த்தக உடன்பாடுகள் மூலம் கூடுதல் சலுகைகளை வழங்குவதாகவும் பிரான் அதிபர் உறுதியளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை காலாவதியாகவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் அதற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
