‘றோ’வினால் தேர்தலில் வெற்றி பெறவில்லை – மங்கள சமரவீர
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது, மக்களாலேயே தவிர, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வினால் அல்ல என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் ‘றோ’ அதிகாரி முன்னின்று செயற்பட்டதாக, நேற்று அனைத்துலக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
புதுடெல்லியில் நேற்று மாலை கருத்து வெளியிட்ட மங்கள் சமரவீர,
“அந்த அறிக்கையில் அர்த்தம் இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றது மக்களால் தானே தவிர, ‘றோ’வினால் அல்ல.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு இயல்பானதாக இருந்தது.
சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டத்தில் அந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பைத்தியக்காரத்தனமான வெளிவிவகாரக் கொள்கை கடைப்பிடிப்பட்டது.
அதன் விளைவாக, அனைத்துலக சமூகத்திடம் இருந்து கொழும்பு அந்நியப்படுத்தப்பட்டு விட்டது.
திருத்தங்கள் எல்லா விடயங்களிலும் மேற்கொள்ளப்படும்.
சுஸ்மா சுவராஜுடனான சந்திப்பின் போது பரந்துபட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை சிறிலங்கா எதிர்பார்க்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.