மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மீது தாக்குதல்
மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் சாகிப் அன்சார் மற்றும் சிறிலங்கா தூதரக இரண்டாவது செயலர் ஆகியோர் கோலாலம்பூரில் தமி்ழ் அமைப்புகளால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.
மலேசியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவையும், அவரது மருமகளும், மாகாணசபை உறுப்பினருமான சமன்மலி சகலசூரியவையும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டுத் திரும்பிய போதே, சிறிலங்கா தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நேற்று மாலை தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் நடத்திய இந்த தாக்குதலில் மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் சாகிப் அன்சாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவததில் சிறிலங்கா தூதரக இரண்டாவது செயலரும் காயமடைந்தார். இவர்கள் இருவரும் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா தூதுவர் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள மலேசிய பொலிஸ்மா அதிபர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மலேசியா சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள நிலையில், கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.