சிறிலங்கா அமைச்சர் சீனாவில் ஆய்வுப் பயணம்
அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டில் பாரிய கைத்தொழில் வலயத்தை அமைப்பது தொடர்பான ஆய்வுக்காக சிறிலங்காவின் சிறப்பு பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.
சீனாவில் கட்டப்பட்டுள்ள கைத்தொழில் பூங்காக்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சரத் அமுனுகமவுடன், அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 14 பேரும் சீனா சென்றுள்ளனர்.
அம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கைத்தொழில் வலயம் தொடர்பாக அண்மையில் சிறிலங்கா பிரதமர் தலைமையில் கள ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்த சீன தூதுவர் விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
சரத் அமுனுகம தலைமையிலான குழுவினர், சீனாவின் சோங்கின் மற்றும் தாய்லாந்தின் ராயோங் கைத்தொழில் பூங்காக்களுக்குச் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
கைத்தொழில் பூங்காக்களின் கட்டுமானம், முகாமைத்துவம், மற்றும் விரிவான அபிவிருத்தி தொடர்பான சீனாவின் அனுபவங்களை இந்தக் குழுவினர் கேட்டறிந்து கொள்வர்.
வரும் 28ஆம் நாள் வரை இந்த ஆய்வுப் பயணம் இடம்பெறவுள்ளது.