தமிழர் மூலம் பொருளாதாரத்தை அழிக்க முயற்சியாம் – இனவாத பரப்புரையில் சரத் என் சில்வா
தமிழர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இனவாதப் பரப்புரையில் இறங்கியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பரப்புரை மேடையிலேயே அவர் இவ்வாறு பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் மாத்தளை மாவட்டத்தில் உள்ள நாவுல பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய சரத் என் சில்வா,
”மத்திய வங்கியை குண்டுத்தாக்குதலில் அழித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க அன்று விடுதலைப் புலிகள் முற்பட்டனர்.
இன்று புலம்பெயர் தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்க ஊடாக, தமிழர் ஒருவரை மத்திய ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க முற்பட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க இன்று விடுதலைப் புலிகளின் தேவைக்கேற்ப செயற்படுகிறார்.” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தீவிர பரப்புரைகளை மேற்கொண்ட சரத் என்.சில்வா தற்போது, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவோம் என்று பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.
சுனாமி நிவாரண நிதியை மோசடி செய்த ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில் மகிந்த ராஜபக்சவை தண்டிக்காமல் விடுதலை செய்ததற்காக, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக பகிரங்கமாக மேடையில் கூறியிருந்தார் சரத் என். சில்வா.
தற்போது அவர், மகிந்தவை மீண்டும் பிரதமராக்குவதற்கதாக தமிழருக்கு எதிரான இனவாதத்தை ஆயுதமாக தூக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.