முன்னாள் இராணுவ அதிகாரியிடம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு கட்டமாகவே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 42,000 பேரைக் கொண்ட சிறிலங்காவின் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், போரின் போது முப்படைகளுக்கும் உதவியாகச் செயற்பட்டு வந்தது.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் இதற்கு முன்னர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராக பணியாற்றி வந்தனர்.
தற்போது இது முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்கவின் வசம் வந்துள்ளது.
இவர் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 36 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவர் இன்று பம்பலப்பிட்டியிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில் பதவியேற்கவுள்ளார்.