கேரளா- சிறிலங்கா இடையே விரைவில் சுற்றுலாப் பயணிகள் கப்பல்சேவை
இந்தியாவின் கேரள மாநிலத்துக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம், கேரளாவில் இருந்து வந்த குழுவினருடன், இது குறித்து முதல்சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் ஒரு மாத இடைவெளிக்குள், கேரளாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்த விபரங்கள் அனைத்தும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் சேவை நேரம் சுமார் 16 மணித்தியாலங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, திருவனந்தபுரத்தில், இன்று கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்த சிறிலங்கா அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, அவரை சிறிலங்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.