திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்ட புத்தர்சிலை நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு அவசர அவசரமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடம் ஒன்றில், புத்தர்சிலையை வைக்க முற்பட்ட பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், புத்தர் சிலையை காவல்துறையினர் பலவந்தமாக அகற்றியிருந்தனர்.
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், பாதுகாப்பிற்காக அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்திருந்தார்.
அதற்கமைய, நேற்று பிற்பகல் காவல்துறையினரே புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்து பிரதிஷ்டை செய்தனர்.
இதன்போது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.


