சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று ஆரம்பம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், 5 ஆவது சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல், இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா நேற்று கொழும்பில் இருந்து பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
திட்டமிட்டபடி நடைபெறவுள்ள பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, சிறிலங்காவின் உயர் மட்டக் குழுவினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர் என்பதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடல் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை நிறைவடையும்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளும், இராணுவ உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
4 ஆவது சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் கொழுழும்பில் கடந்த 2024 ஜனவரியில் இடம்பெற்றிருந்தது.