பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நடந்த தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள்
இந்திய-சிறிலங்கா அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றன.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில், நேற்றுக்காலை அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் இங்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும், தியாகதீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகள் பகிரங்கமாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.